குடியிருப்பு பகுதியில்செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


குடியிருப்பு பகுதியில்செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:47 PM GMT)

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனா்.

விழுப்புரம்


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லூரிக்கும், கல்லூரி சாலைக்கும் இடையே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காலிமனையில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு மிக அருகில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அரசு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு செல்போன் கோபுரம் அமைந்தால் அதன் மூலம் ஏற்படும் கதிர்வீச்சினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலவித நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் அந்த தனியார் நிறுவனம், செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதை கண்டித்து நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்குள்ள கல்லூரி சாலைக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு திரண்டு சென்று பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story