செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

கீரனூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

கீரனூர் அருகே உள்ள குளத்தூர் கீழத்தெரு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் டவர் (கோபுரம்) அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் கீரனூர் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். அதில் ஏற்கனவே இப்பகுதியில் ஒரு செல்போன் டவர் இருப்பதாகவும், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்களை பாதிப்பதாகவும், மழை-இடி நேரங்களில் வீட்டில் உள்ள மின்சாதனங்கள் பழுதடைந்து வருவதாகவும் தெரிவித்தனர். தற்போது ஏற்கனவே உள்ள டவரில் இருந்து 100 மீட்டர் அருகிலேயே மீண்டும் ஒரு செல்போன் டவர் அமைக்க இருப்பதை தடுக்க வேண்டும். மேலும், நடவடிக்கை எடுக்க தவறினால் சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வருவாய் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செல்போன் நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story