சிமெண்டு சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


சிமெண்டு சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

குன்னத்தில் சிமெண்டு சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் சிவசங்கர் திரும்பி சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி குன்னம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் ஆசிரியர்களுக்கான கழிவறையும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சம் செலவில் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை அமைக்கும் பணியையும், காலனி தெருவில் ரூ.16 லட்சம் 4 ஆயிரம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியையும், காலனி வடக்கு தெருவில் ரூ.13 லட்சத்து 16 ஆயிரம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜமீன் பேரையூர் கிராமத்திலிருந்து அடுத்தடுத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்து விட்டு கரம்பியம் கிராமத்தில் இருந்து குன்னம் கிராமத்திற்கு அமைச்சர் சிவசங்கர் வந்தார். அப்போது அப்பகுதி மக்கள் தார்சாலையாக இருந்ததை சிமெண்டு சாலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் சமாதானம் செய்து சிமெண்டு சாலையை பழையபடி தார்சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைதொடர்ந்து இந்த பணியை ெதாடங்கி வைக்காமல் வெண்மணி கிராமத்திற்கு அமைச்சர் சிவசங்கர் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story