மாற்றுத்திறனாளியின் வீட்டை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு


மாற்றுத்திறனாளியின் வீட்டை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

கருங்கல் அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளியின் வீட்டை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள வட்டகோட்டை அஞ்சுவரிக்கவிளையைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 59), மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகாத இவர், கிள்ளியூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் பல ஆண்டுகளாக பாலூர் குளத்தையொட்டி உள்ள கால்வாய் கரையில் சாலையோர புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலையில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருங்கல் போலீசாருடன் ஜான்சனின் வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து மாநில வணிகர் சங்க துணைத்தலைவர் கருங்கல் ஜார்ஜ், இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றிய தலைவர் மணிகண்டன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அங்கு வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், பாலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, 'புதுக்கடையில் இருந்து தொடங்கி அனைத்து சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் மட்டுமே மாற்றுத்திறனாளியின் வீட்டை இடிக்க அனுமதிப்போம் என்றும், தனியாக இந்த வீட்டை மட்டும் இடிக்க அனுமதிக்க மாட்டோம்' என்றும் பொதுமக்கள் உறுதியாக கூறினர். இதையடுத்து வேறுவழியின்றி அதிகாரிகள் வீட்டை இடிக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு திரும்பிச் சென்றனர்.


Next Story