நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு


நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 May 2023 6:30 PM GMT (Updated: 21 May 2023 5:32 PM GMT)

இருவழிச்சாலை பணிக்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நடுவே நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இதன் அருகே கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆலமரம் இந்த ஊரின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த ஆலமரத்தை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் சாலை விரிவாக்க பணிக்கு தேவையான இடங்கள் இருக்கும்போது ஏன் இந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த ஊரின் அடையாளமாகவும், வழிப்போக்கர்கள் மற்றும் கிராம மக்களை வெயிலில் இருந்து காத்து வந்த பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 100 ஆண்டுகளுக்கு மேலாக நிழல் தந்து மக்களை காப்பாற்றிய ஆலமரத்தை தெய்வமாக வழிபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த பூசாரியிடம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயபக்தியுடன் ஆலமரத்தை வணங்கி விபூதி வாங்கி சென்றனர். அரசு அதிகாரிகள் இந்த ஆலமரத்தை அகற்றாமல் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story