பட்டாபிராம் அருகே சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்


பட்டாபிராம் அருகே சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்
x

பட்டாபிராம் அருகே சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.

சென்னை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு செல்லும் சாலை போடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளான அந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று காலை பட்டாபிராம் தண்டுரை பகுதியில் இருந்து பூந்தமல்லி செல்லும் பிரதான சாலையின் குறுக்கே முள்செடிகளை வெட்டிப்போட்டும், சாலையின் நடுவில் அமர்ந்தும் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நிண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி மாநகராட்சி உதவி என்ஜினீயர் சத்தியசீலன் மற்றும் பட்டாபிராம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணிநேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.


Next Story