சொக்கநல்லூர், ஆண்டார்குப்பம் ஊராட்சிகளில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்


சொக்கநல்லூர், ஆண்டார்குப்பம் ஊராட்சிகளில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x

சொக்கநல்லூர், ஆண்டார்குப்பம் ஊராட்சிகளில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

திருவள்ளூர்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவள்ளூரை அடுத்த சொக்கநல்லூர் ஊராட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான சா.மு.நாசர் கலந்து கொண்டு மக்கள் தொடர்பு திட்ட முகாமை தொடங்கி வைத்து பல்வேறு அரசுத்துறைகள் சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, புதிய மின்னணு ரேஷன்கார்டு, முதல் வாரிசு சான்று, முதல் பட்டதாரி சான்று, சலவைப்பெட்டி என மொத்தம் 543 பேருக்கு ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 910 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, தாசில்தார்கள் செல்வம், சுகந்தி, ஊராட்சி மன்ற தலைவர் துரைமுருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கமலேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டார்குப்பம்

பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் ஊராட்சியில் அடங்கியது பெருஞ்சேரி கிராமம் இங்கு தமிழக அரசின் வருவாய்த்துறை பேரிடர் மற்றும் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கூடுதல் பொறுப்பு கமலா தலைமை தாங்கினார். பொன்னேரி ஆர்.டி.ஓ. காயத்ரிசுப்பிரமணி, பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோழவரம் ஒன்றிய குழுத்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.கோவிந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியம், பட்டா, பட்டா நகல், வாக்காளர் அடையாள அட்டை, வேளாண்மை பயனாளிகள், தோட்டக்கலைத்துறை பயனாளிகள், மருத்துவ துறை, ஆதிதிராவிடர் நலத்துறை பயனாளிகள், மருத்துவ காப்பீடு கால்நடைத்துறை பயணிகள் உட்பட 494 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் கனிமொழிசுந்தரம், ஆண்டார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்த்திஅரிபாபு, மாதவரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனிதாசில்தார் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Next Story