குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

மெலட்டூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், சுரைக்காயூரில் உள்ள வடக்குத் தெருவில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மெலட்டூர்-திருக்கருகாவூர் சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மெலட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில், சுரைக்காயூர் வடக்குத்தெரு பகுதிக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இப்பகுதியில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. ஆகவே, தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்கவும், தினமும் குடிநீர் வினியோகம் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

உங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக மெலட்டூர்-திருக்கருகாவூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story