திருடர்களை போலீசார் அழைத்து செல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்...!


திருடர்களை போலீசார் அழைத்து செல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்...!
x

ஆரல்வாய்மொழியில் பிடித்து வைத்த திருடர்களை போலீசார் அழைத்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பைக் மற்றும் நகைகளை திருடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெருமாள்புரம் பகுதியில் இரண்டு வாலிபர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருட முயன்றுள்ளனர்.

இரவு நேரத்தில் அக்கம்பக்கத்தினர் பார்த்ததால் ஊர் பொதுமக்கள் அந்த இரு வாலிபர்களை பிடித்து அருகில் உள்ள மின் கம்பத்தில் கட்டிவைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால் அதிகாலை வரை போலீசார் இரு குற்றவாளிகளையும் போலீஸ் நிலையம் கொண்டு செல்ல மறுத்துவிட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாகர்கோவில்-திருநெல்வேலி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பார்த்த பிறகுதான் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லமுடியும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு வாலிபர்களையும் போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story