குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: சங்கராபுரம் அருகே பரபரப்பு


குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: சங்கராபுரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 3 July 2023 7:01 AM GMT)

சங்கராபுரம் அருகே குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள 9-வது வார்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதிக்குட்பட்ட பெரும்பாலான தெருக்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதே வார்டில் உள்ள கெங்கையம்மன் கோவில் மேற்கு தெருவில் உள்ள 50 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியும் செய்து தரப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரக்கோரி திடீரென பூட்டை காலனி பஸ் நிறுத்தம் அருகே திடீரென நேற்று காலை 7 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சங்கராபுரம்- பாலப்பட்டு செல்லும் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story