பேராசிரியர் நண்பருக்கு பொதுமக்கள் தர்ம அடி

கல்லூரி மாணவியிடம் செல்போன் நம்பர் கேட்ட பேராசிரியர் நண்பருக்கு பொதுமக்கள் தர்ம அடி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு இளங்கலை கணிதம் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஊருக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்து நின்றார். அப்போது அங்கு வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் கல்லூரி மாணவியிடம் செல் போன் நம்பர் கேட்டு அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது கணவருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த மாணவியின் கணவர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மர்மநபர்கள் இருவரையும் தர்ம அடி கொடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி துணை பேராசிரியர் சிவகுமார் மற்றும் இவரது நண்பர் விருத்தாசலம் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.






