போக்குவரத்து பணியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!


போக்குவரத்து பணியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
x
தினத்தந்தி 27 Oct 2022 5:07 AM GMT (Updated: 27 Oct 2022 7:32 AM GMT)

சென்னை மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் பணிமனையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் பணிமனையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த நெறிமுறைகள் பின்வருமாறு:-

பணிமனைக்குள் உள்ள ஓட்டுநர், நடத்துனர் ஓய்வறையில் எந்த காரணம் கொண்டும் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை கூடாது. மீறுபவர்களை உரிய மேற்பார்வையாளர், பாதுகாவலர் ஆகியோரின் அடிப்படை புகாருடன் கிளை மேலாளரின் பரிந்துரையுடன் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிமனைக்குள் எந்த ஒரு பணியாளரும் வரக்கூடாது. பாதுகாவலர்கள் எந்த சூழ்நிலையிலும் மது அருந்திய பணியாளர்களை அனுமதிக்கக் கூடாது. மீறிச் செல்லும் பணியாளர்கள் மீது உடனடியாக தலைமையகத்தின் மூலம் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஓட்டுனர், நடத்துனர் ஓய்வறைகளின் மேல் தளங்களில் ஏதேனும் திறந்த நிலையில் அறைகள் அல்லது வெட்டவெளி தளங்கள் இருப்பின் அவற்றை பணியாளர்களின் பாதுகாப்பு கருதி பூட்டி வைக்க வேண்டும்.

பணியில் இருக்கும்போது கைபேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும்.

எந்த ஒரு பணியாளரும் பணி நேரத்தில் பணிமனையை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அனுமதி சீட்டில் உரிய மேற்பார்வையாளரின் அனுமதி பெற்று பாதுகாவலரிடம் தெரிவித்து வெளியே செல்ல வேண்டும்.

பகல் பொழுதில் பேருந்துகள் தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக்கப்படும் போது ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தினை இயக்கக்கூடாது.

மின் சாதனங்களை கையாளும் பணியாளர்கள் கண்டிப்பாக கையுறை மற்றும் உரிய காலணிகளுடன் பாதுகாப்பான முறையில் பணி செய்திட வேண்டும். மின்சாரத்தால் இயக்கக் கூடிய இயந்திரங்கள் தரைப் பகுதியில் கண்டிப்பாக ரப்பர் மேட்கள் போடப்பட வேண்டும்.

இயந்திரங்கள் இயக்கப்படாத நிலையில் உரிய மேல் உரைகள் கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். இயந்திரங்களில் பாதுகாப்பு உரைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இயந்திரங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை கையாள வேண்டும், பாதுகாப்பு உடைகளை அணிந்தே பணி செய்திட வேண்டும்.

பேருந்துகள் பணிமனையின் உள்ளே வரும் போது ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர்கள் பேருந்தின் உள்ளே ஆய்வு செய்து, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களோ அல்லது வெடி பொருட்களோ இருப்பின் அவற்றை உரிய பாதுகாப்பான முறையில் அகற்றிடவும். தேவை ஏற்படின் அருகில் உள்ள காவல்துறை அல்லது தீயணைப்பு துறையின் உதவியுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும்.

பணிமனையில் மேற்குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை கிளை மேலாளரும், பணியிலிருக்கும் மேற்பார்வையாளரும், பாதுகாவலர்களும் கண்டிப்பாக உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story