சமூக வலைத்தளத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியீடு


சமூக வலைத்தளத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியீடு
x
தினத்தந்தி 8 March 2023 12:15 AM IST (Updated: 8 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியீடு

கோயம்புத்தூர்

கோவை

சமூக வலைத்தளத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நிற்பது போன்று இளம்பெண் வீடியோ வெளியிட்டு உள்ளார். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரவுடிகள் கைது

கோவையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கோவையில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவுடிகளிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ரவுடிகளை பட்டியலிடும் பணி நடந்தது.

அதுபோன்று பிரகா சகோதரர்கள் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்கள் குழு பொம்மை துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நிற்பது போன்ற வீடியோவை வெளியிட்டனர். இது தொடர்பாக போலீசார் ரவுடிகளை கண்காணித்து, 54 பேரை கைது செய்தனர். இதனால் தற்போது கோவையில் கஞ்சா விற்பனை குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

வீடியோ பதிவேற்றம்

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி என்கிற தமன்னா (வயது 23). இவர் கோவை காளப்பட்டியில் வசித்து வருகிறார். அவர் பிரண்ட்ஸ் கால் மி தமன்னா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்து உள்ளார். அதில் அவர், தான் பயங்கர ஆயுதங்களுடன் நிற்பதுபோன்ற புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். எனவே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையை சேர்ந்த போலீசார் வினோதினியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

பகையை வளர்க்க முயற்சி

சமூக வலைத்தளத்தில் மோதல்களை தூண்டுவதுபோன்று புகைப்படங்களோ, வீடியோக்களோ மற்றும்தகவல்களோ பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளம்பெண் வினோதினி இது தொடர்பாக 2 வீடியோக்களை வெளியிட்டு உள்ளார்.

மேலும் அவர் வசதி படைத்த இளைஞர்களிடம் பேசி, அவர்களை ஒரு இடத்துக்கு வரவழைத்து, தனது ஆண் நண்பர்கள் மூலம் அந்த இளைஞர்களை மிரட்டி பணமும் பறித்து வந்து உள்ளார். அத்துடன் இதுபோன்று வீடியோக்களை வெளியிட்டு 2 குழுக்களுக்கு இடையே பகையையும் வளர்க்க முயற்சி செய்து உள்ளார். எனவே அவரை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட வினோதினி கடந்த 2021-ம் ஆண்டு தனது ஆண் நண்பருடன் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர் என்பதும், அவர் நர்சிங் படித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story