அக்னி வீரர் பணிக்கு புதுச்சேரி, 11 மாவட்ட இளைஞர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு -தமிழக அரசு தகவல்


அக்னி வீரர் பணிக்கு புதுச்சேரி, 11 மாவட்ட இளைஞர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு -தமிழக அரசு தகவல்
x

அக்னி வீரர்கள் பணிக்கு விண்ணப்பிக்க புதுச்சேரி மற்றும் 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டுக்கான அக்னி வீரர்களை (ஆண்கள்) தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை www.joinindianarmy.nic.in இணையதளத்தில் 15-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியில் சேருவதற்காக, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருமணம் ஆகாத ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அக்னி வீரர் பொதுப்பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி), டிரேட்ஸ் மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) உள்ளிட்ட பணிகளில் சேரலாம்.

ஆன்லைன் தேர்வு

இந்தப் பணியில் சேர விரும்புகிறவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 16-ந்தேதியில் இருந்து (நேற்று) அடுத்த மாதம் மார்ச் 15-ந்தேதிவரை ஆன்லைனில் அதற்கான பதிவை செய்து கொள்ளலாம்.

மார்ச் 17-ந்தேதி தொடங்கும் ஆன்லைன் தேர்வுகளை எழுதுவதற்கான அனுமதி அட்டை ஆன்லைன் மூலமாகவே அனுப்பப்படும். எனவே இந்த இணையதளத்தில் பெயர் பதிவு செய்யும்போது அவரவரின் இமெயிலை பதிவிட்டு அதை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

போலிகளை நம்ப வேண்டாம்

மேலும் எதுவும் உதவி தேவைப்பட்டால் சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமையகத்தை 044-25674924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அக்னி வீரர்கள் தேர்வு என்பது தானியங்கி முறையில் வெளிப்படையாக நடத்தப்படுவதாகும்.

எனவே போலி முகவர்களை நம்பி மோசம் போக வேண்டாம். அவர்களுக்கு இந்தத் தேர்வில் எந்தவித பங்களிப்பும் கிடையாது. கடின உழைப்பும், தேர்வுக்கான தயார் நிலையுமே தகுதியின் அடிப்படையில் உங்களுக்கு வேலையை பெற்றுத்தரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story