புதுக்கோட்டை தேர் விபத்தில் ஒருவர் பலியான விவகாரம்: மேற்பார்வையாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு


புதுக்கோட்டை தேர் விபத்தில் ஒருவர் பலியான விவகாரம்: மேற்பார்வையாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு
x

புதுக்கோட்டை, பிரகதாம்பாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தேரோட்டம் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேசுவரர் கோவில் ஆகும். தொண்டைமான் மன்னர் காலத்தில் அவர்களது குல தெய்வமாக இக்கோவில் விளங்கியது.

இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தையொட்டி தேரோட்டம் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.

அப்போது தேர் நிலையில் இருந்து புறப்பட்ட உடனே சிறிது நேரத்தில் முன்பக்கமாக தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதில் அரிமலம் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி(59) என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை, பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்தில் ஒருவர் பலியான விவகாரம் தொடர்பாக மேற்பார்வையாளர் மாரிமுத்து என்பவரை கோவில் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளனர். மேலும் புதிய மேற்பார்வையாளராக தட்சிணாமூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story