புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

தெருநாய் தொல்லை

ஈரோடு மொசுவண்ணா தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த தெருநாய்கள் அந்த பகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகள், குழந்தைகள் மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகளை துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ெதருநாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவபாலன், ஈரோடு.

சுகாதார சீர்கேடு

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் ஓடை செல்கிறது. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் இந்த ஓடை வழியாக அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது. தவுட்டுப்பாளையத்தில் இந்த ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் உள்ள பகுதியில் பலர் கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகள் போன்றவற்றை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் ஓடையில் செல்லும் தண்ணீர் மாசுபட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த பகுதியில் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், தவுட்டுப்பாளையம்.

நடவடிக்கை எடுப்பார்களா?

கோபி அருகே உள்ள தடப்பள்ளி கூகலூர் கிளை வாய்க்காலில் இருபுறமும் செடி கொடிகள் படர்ந்துள்ளன. அதனால் தண்ணீரின் வேகம் தடைபட்டு கடை கோடி வரை செல்வதில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் செடி-கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

தடுப்பு சுவர் வேண்டும்

அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் ஏரி வழியாக செல்லும் சாலை அத்தாணி, சத்தி, பவானி, ஈரோடு போன்ற ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. ஆனால் இந்த ஏரி சாலைக்கு தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் அடிக்கடி ஏரிக்குள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன, எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆப்பக்கூடல் ஏரி சாலைக்கு தடுப்பு சுவர் அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

சந்திரன், அந்தியூர்.

வீணாகும் குடிநீர்

ஈரோடு சத்திரோடு 16 அடி சாலை அருகே ரோட்டு ஓரத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சரிசெய்ய வேண்டும்.

தாசன், ஈரோடு,


Next Story