பஞ்சாப் அணி சாம்பியன்


பஞ்சாப் அணி சாம்பியன்
x
தினத்தந்தி 1 Oct 2023 8:00 PM GMT (Updated: 1 Oct 2023 8:01 PM GMT)

கோத்தகிரியில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நீலகிரி


கோத்தகிரியில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கைப்பந்து போட்டி

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் சார்பில், ஆங்கில பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிலான கைப்பந்து போட்டி கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டிகளை ஜூட்ஸ் பள்ளி அணி நடத்தியது. இதில் தமிழ்நாடு, மராட்டியம், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரா (தெலுங்கானா), உத்தரகாண்ட், சண்டிகார், ஜார்கண்ட் ஒடிசா, கர்நாடகா ஆகிய 14 அணிகள் பங்கேற்றன.

மாணவர்களுக்கான கைப்பந்து இறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஆந்திரா (தெலுங்கானா) அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

பரிசு கோப்பை

இதையடுத்து 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் பீகார், கர்நாடகா அணிகள் மோதியது. இதில் பீகார் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய வாலிபால் வீரர் அஜித்லால் சந்திரன், அகமதாபாத் பள்ளி முதல்வர் வினோத் காண்டி கட்லா, நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன், தமிழக அரசின் முன்னாள் செயலாளர் சுர்ஜித், பள்ளி தாளாளர் தன்ராஜன் ஆகியோர் பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது.


Next Story