பொதுமக்களுக்கு தரமான குளிர்பானங்கள் வழங்க வேண்டும்


பொதுமக்களுக்கு தரமான குளிர்பானங்கள் வழங்க வேண்டும்
x

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பயன்படுத்தக்கூடாது, பொதுமக்களுக்கு தரமான குளிர்பானங்கள் வழங்க வேண்டும் என்று வணிகர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

கடலூர்

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்துகின்றனர். இந்த தருணத்தில் சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். சாலையோர உணவு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.

குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் குடிநீர், தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்க்கக் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்பு அதன் காலாவதி நாளை உறுதிப்படுத்திட வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக்கூடாது.

பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பாதுகாப்பான நீரில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்குதல் வேண்டும். பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான குளிர்பானங்கள், பழச்சாறுகளை உணவு வணிகர்கள் வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு 04142-221081 அல்லது 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story