சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 15 July 2023 6:45 PM GMT (Updated: 15 July 2023 6:46 PM GMT)

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.

சிவகங்கை

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.

பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் சிவகங்கை-மதுரை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 70 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஜெய்ஹிந்த்புரம் அக்னிமுருகன் வண்டியும், 2-வது பரிசை திருச்சி செந்தில்பிரசாத் மற்றும் கொட்டாணிப்பட்டி சீமான் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை பன்னைபுரம் சாஜாபிரதர்ஸ் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத்தேவர் வண்டியும், 2-வது பரிசை கல்லுப்பட்டி மகாராஜா வண்டியும், 3-வது பரிசை சிங்கம்புணரி வைரவன் வண்டியும் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 23 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நாட்டரசன்கோட்டை பழனி வண்டியும், 2-வது பரிசை கம்பம் ரகிம்ராவுத்தர் வண்டியும், 3-வது பரிசை கொன்னப்பட்டி மகாராஜா ரமேஷ் வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அதிகரை வேங்கை சேர்வை வண்டியும், 2-வது பரிசை முத்துப்பட்டி பூவலிங்கம் வண்டியும், 3-வது பரிசை தமறாக்கி பஞ்சமுத்து வண்டியும் பெற்றது.

வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளை சாலையோரம் நின்றிருந்த பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.


Next Story