ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 26 March 2023 7:00 PM GMT (Updated: 26 March 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு, அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை எதிரில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜே.எஸ். ஆறுமுகம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், நாராயணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்கள் கருப்பு துணியை வாயில் கட்டிக் கொண்டும், கறுப்பு சட்டை அணிந்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் பி.சி.சேகர், ரகமத்துல்லா, நகர தலைவர் (தெற்கு) லலித் ஆண்டனி, முபாரக் (வடக்கு), மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், நிர்வாகிகள் யுவராஜ், ராஜேந்திரவர்மா, ஜாக்கப், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஓசூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ராம்நகர் அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்துக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் வீர.முனிராஜ், தொரப்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிகுமார், கீர்த்தி கணேஷ் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி உள்ள காந்தி சிலை முன்பு வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜ் தலைமையில் பா.ஜ.க. அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நாச்சிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா நாகராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் பைரேஷன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் முனிராஜ் மற்றும் துணைத் தலைவர் வாசு மற்றும் நிர்வாகிகள் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினர்.

இதை தொடர்ந்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனையை எதிர்த்தும், பதவி பறிப்பை கண்டித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முருகன், பதி, நசிமுல்லா, சிலம்பரசன், மூர்த்தி, முபாரக் குமார், ஜாவித், காதர் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story