ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க 84-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையில் பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இதயம் வி.ஆர்.முத்து கலந்து கொண்டார். துணைத்தலைவர் பத்மநாபன் வரவேற்றார்.
செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் நாராயணசாமி முதன்மை விருந்தினரை வரவேற்று பேசினார். அப்போது ராம்கோ சேர்மன் பி. ஆர். வெங்கட் ராமராஜா பேசியதாவது:-
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் வணிகர் நலனை மட்டுமல்லாது பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ரெயில்வே மேம்பாலம்
ராஜபாளையத்தில் தாமதமாக நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலம், தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை புறவழிச்சாலை ஆகிய திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மற்ற மாநகராட்சி, நகராட்சிகளின் சொத்து வரியை விட ராஜபாளையம் நகராட்சி சொத்து வரி அதிகமாக இருப்பதால் வரி உயர்வை நமது சங்கம் அடிப்படை சொத்து வரி விகிதத்தை குறைத்து அதற்கு பின் சொத்து வரியை நிர்ணயிக்கும் படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசலை குறைக்க ரெயில்வே சுரங்க பாதையையும் விரைந்து முடிக்க வேண்டும். கூடுதல் ரெயில் வசதிகள், மின் மயமாக்கல் பணி இவற்றையும் விரைந்து முடிக்க கோரி தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மீண்டும் தொழில் வர்த்தக சங்க தலைவராக ராம்கோ சேர்மன் பி. ஆர். வெங்கட் ராமராஜா, துணைத்தலைவர்கள் ஸ்ரீ கண்டன்ராஜா, பத்மநாபன், செயலாளர்களாக வெங்கடேஸ்வரா ராஜா, நாராயணசாமி, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் இணைச்செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.






