ரெயில்வே கேட் 40 நிமிடங்கள் மூடல்


ரெயில்வே கேட் 40 நிமிடங்கள் மூடல்
x
தினத்தந்தி 9 July 2023 7:15 PM GMT (Updated: 10 July 2023 9:15 AM GMT)

நீடாமங்கலத்தில் நேற்று 40 நிமிடங்கள் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திருவாரூர்

ரெயில்வே கேட் மூடல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருச்சி பணிமனைக்கு பராமரிப்பு பணிக்காக ராஜஸ்தான் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடை பகுதியில் வந்து நின்றது.

இதற்காக காலை 5.20 மணி அளவில் நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. ரெயில் என்ஜின் திசைமாற்றும் பணி முடிந்து காலை 6 மணி அளவில் அந்த ரெயில் புறப்பட்டு சென்றது. 40 நிமிடங்கள் வரை ரெயில்வே கேட் மூடப்பட்டதால் தஞ்சை- நாகை நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ்களில் வந்தவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தாமதம்

வழக்கமாக சனிக்கிழமை மாலை ராஜஸ்தான் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் வழியாக மன்னார்குடிக்கு சென்று பின்னர் மீண்டும் நீடாமங்கலம் வந்து என்ஜின் திசைமாற்றி திருச்சி செல்லும். ஆனால் ரெயில் தாமதமானதால் நேற்று அதிகாலை தான் பராமரிப்பு பணிக்காக திருச்சி சென்றது. ரெயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க தஞ்சை முதல் நாகை வரையிலான இருவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நீடாமங்கலம் மேம்பாலம் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story