தர்மபுரி மாவட்டம் முழுவதும்சூறைக்காற்றுடன் கனமழைபசுமை குடில்கள் சரிந்து சேதம்


தர்மபுரி மாவட்டம் முழுவதும்சூறைக்காற்றுடன் கனமழைபசுமை குடில்கள் சரிந்து சேதம்
x
தினத்தந்தி 31 Aug 2023 7:00 PM GMT (Updated: 31 Aug 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் காரிமங்கலம் அருகே அமைக்கப்பட்டிருந்த பசுமை குடில்கள் சரிந்து சேதமடைந்தது.

கனமழை

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள சாலைகள் சேதம் அடைந்தது. பலக்கோட்டில் 24.2 மில்லி மீட்டரும், அரூரில் 21.2 மில்லி மீட்டரும், மொரப்பூரில் 30 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 12.4 மில்லி மீட்டரும், பென்னாகரத்தில் 3 மில்லி மீட்டரும், தர்மபுரியில் ஒரு மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 91.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

பசுமை குடில்கள் சேதம்

காரிமங்கலம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் திண்டல் அருகே உள்ள உச்சம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் அமைத்திருந்த பசுமை குடில்கள் கீழே சரிந்து சேதமடைந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு இருந்த இந்த பசுமை குடில்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த பசுமைக் குடிலில் வைக்கப்பட்டிருந்த குடைமிளகாய், தக்காளி செடிகளும் நாசமானது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி வடிவேல் கூறுகையில், வங்கியில் கடன் வாங்கி ரூ.40 லட்சம் மதிப்பில் பசுமைக் குடில்கள் அமைத்து இருந்தோம். சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பசுமை கூட்டல்கள் கீழே சரிந்து மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இனி நாங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் பசுமை குடில்களுக்கு காப்பீடு தர முடியாது என்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story