நீலகிரி மலைப்பகுதியில் கனமழை எதிரொலி: மாயாற்றில் வெள்ளப்பெருக்கு- ஆபத்தை உணராமல் பரிசலில் பயணிக்கும் கிராம மக்கள்


நீலகிரி மலைப்பகுதியில் கனமழை எதிரொலி: மாயாற்றில் வெள்ளப்பெருக்கு- ஆபத்தை உணராமல் பரிசலில் பயணிக்கும் கிராம மக்கள்
x

நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் கிராம மக்கள் மாயாற்றில் படகு பயணம் செய்து வருகின்றனர்.

ஈரோடு

பவானிசாகர்

நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் கிராம மக்கள் மாயாற்றில் படகு பயணம் செய்து வருகின்றனர்.

பரிசலில் ஆபத்தான பயணம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் மாயாற்றை பரிசலில் கடந்து தான் பவானிசாகர், சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இதுபோன்ற நேரங்களில் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம், அல்லிமாயாறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், ஆபத்தை உணராமல் பரிசலில் கடந்து சென்று வருகின்றனர். பரிசல் தட்டு தடுமாறி வெள்ளத்தில் செல்கிறது.

தொங்கு பாலம் வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, 'நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் மாயாற்றை கடப்பது கடினமாக இருந்து வருகிறது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது. இருந்தாலும் நாங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றாக வேண்டும்.

இதனால் சில சமயங்களில் உயிரைப் பொருட்படுத்தாமல் மாயாற்றை கடந்து செல்கிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கை நிறைவேறினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.


Related Tags :
Next Story