நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்ப்பிடிப்பு பகுதி

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணைக்கு வந்து அங்கிருந்து மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகர் அணைக்கு வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹடா வனப்பகுதி வழியாக வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.49 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 856 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தொடங்கி உள்ளது. நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 748 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 70.59 அடியாக இருந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story