மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம்


மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

வீடுகள், வணிக நிறுவனங்களில் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனம் இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

மழைநீர் சேகரிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர், விவசாயம், கோடைகால தேவைக்கும் மழைநீர் சேகரிப்புத்திட்டம் இன்றியமையாததாக அமையும், எனவே தூய்மையான குடிநீர் மற்றும் எதிர்கால தேவைக்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானதாகும். ஆகவே ஒவ்வொரு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்தி முறையாக பராமரித்து மழைநீரை சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) செ.கலைமாமணி, உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், உதவி பொறியாளர்கள் ஜாய், கார்த்திகேயன், இளநிலை நீர்பகுப்பாய்வாளர் ஆனந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story