ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்


ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்
x

ரஜினிகாந்தின் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கின்றனர்.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று வரும் 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். ரஜினிகாந்தின் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணா ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு வரும் 23 ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.


Next Story