துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்


துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:47 PM GMT)

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை மிரட்டும் வகையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இலங்கை கடற்படையினர் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை மிரட்டும் வகையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இலங்கை கடற்படையினர் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கியால் சுட்டனர்

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த மீன்பிடி படகுகளை விரட்டி அடித்தனர். மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். மேலும் மீனவர்களை எச்சரித்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

பதற்றம்

இதனால் பதற்றம் அடைந்த மீனவர்கள் அந்த பகுதியில் இருந்து விரைந்து படகுடன் ராமேசுவரம் பகுதியை நோக்கி கரை திரும்பினர். தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி விரட்டிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படை

இதுகுறித்து மீனவ சங்க தலைவர் சகாயம் கூறும்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். வேலை நிறுத்தம் முடிந்து மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். மீனவர்களை விரட்டி அடிப்பதும், சிறை பிடிப்பதும் தொடர் சம்பவங்களாகவே நடைபெற்று வருகின்றது.

இதை மத்திய-மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்க்காமல் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

விசாரணை

இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்த சம்பவம் குறித்து ராமேசுவரம் மீனவர்கள் யாரும் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர காவல் நிலையத்திலும் எந்த ஒரு புகார் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story