தங்கம், வெள்ளி பதக்கங்களை அள்ளி குவித்த தமிழக குத்து சண்டை வீரருக்கு அபூர்வ அறுவை சிகிச்சை

தமிழக குத்துசண்டை வீரருக்கு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் ஆபூர்வ அறுவை சிகிச்சை அளித்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
கடலூரைச் சேர்ந்தவர், 21 வயதான பாலாஜி. இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வருகிறாா். குத்து சண்டை மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து, சேம் எபனேசர் என்ற பயிற்சியாளர் மூலம் குத்து சண்டையை முறையாக கற்று கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் சுழற்கோப்பைக்கான குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்டார். அப்போது இவருடன் மோதிய சகவீரர், விட்ட குத்தால் இவருடைய இடது தோள்பட்டை மணிக்கட்டு இடம் மாறியது. உடனே அவரே அதனை சரி செய்து அந்த போட்டியில் வலியுடன் விளையாடி வெண்கல பதக்கம் பெற்றார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாட முடியாமல் திரும்பினாா். பல பதக்கங்களை குவித்த வீரர் பாலாஜி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு ஆஸ்பத்திரியில் தோள்பட்டை சீரமைப்பு துறை பேராசிரியர் டாக்டர் லியனார்டு பொன்ராஜ் சந்தித்து ஆலோசனை செய்தார். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து ஓய்வு எடுத்து வருகிறார்.
இதுகுறித்து டாக்டர் லியனார்டு பொன்ராஜ் கூறியதாவது:-
மூட்டு உள்நோக்கி கருவி பாலாஜிக்கு இடது தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு 'போனி பாங்காட்' எனப்படும் அதாவது தோள் மூட்டு கிண்ணத்தில் சவ்வோடு சேர்ந்து அந்த கிண்ணத்தில் எலும்பு உடைத்தலாகும். இது ஒரு அபூர்வமான பிரச்சினையாகும். இதற்கு அவர் சிகிச்சை நாடி வந்த போது மூட்டு உள்நோக்கி கருவி அறுவை சிகிச்சை மூலம் இந்த 'போனி பாங்காட்' என்ற பிரச்சினையை தமிழக அரசு ஆஸ்பத்திரி வரலாற்றிலேயே முதன் முறையாக ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சரி செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையோடு மேலும் பல போட்டிகளில் அவர் கலந்து கொண்டதால் அருகில் உள்ள மற்ற 2 சவ்வுகளும் சேதமடைந்தன. ஆதலால் 3 சவ்வுகளையும் சரிசெய்ய 2½ மணிநேரம் அறுவை சிசிச்சை செய்யப்பட்டது. குறிப்பாக உள்நோக்கி சிகிச்சை மூலம் சேதமடைந்த பந்து மூட்டு சரி செய்யப்பட்டு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சவால் விடும் வகையில் இந்த அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்து உள்ளோம். இதற்கான ஆலோசனைகளை வழங்கிய மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விமலா மற்றும் நோயாளியை பரிந்துரைத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் ஆனந்தகுமாருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
டாக்டர்களுக்கு நன்றி இதுகுறித்து குத்து சண்டைவீரர் பாலாஜி கூறும்போது, "போட்டியின் போது தவறுதலாக விழுந்த அடியால் என்னுடைய இடது கை மூட்டு சேதமடைந்தது. நான் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடை யவில்லை. தற்போது ஓமாந்தூரார் ஆஸ்பத்திரியில் டாக்டர் லியனார்டு பொன்ராஜ் அளித்த சிசிச்சை மூலம் குணம் அடைந்து வருகிறேன் . மீண்டும் 6 மாதத்துக்கு பிறகு முழுமையாக குணம் அடைந்த பிறகு மீண்டும் போட்டியில்
கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்து உள்ளது. இதற்கு டாக்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.






