ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை


ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை
x

கடலாடி பகுதியில் ஏ.புனவாசல் கிராமத்தில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கடைகளில் ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை விற்பனை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி பகுதியில் ஏ.புனவாசல் கிராமத்தில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கடைகளில் ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை விற்பனை செய்யப்படுகிறது.

விலைவாசி உயர்வு

விலைவாசி ெபருமளவு உயர்ந்துள்ள நிலையில் குறைந்தவிலையில் உணவு என்பது சாத்தியமற்றமாக மாறி வருகிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ. புனவாசல் கிராமத்தில் ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை விற்பனை செய்யப்படுவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த தோசை கடைகளில் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் குறைந்த விலையில் இட்லி, தோசையை ருசித்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

5-க்கும் மேற்பட்ட தோசை கடைகள் உள்ளன. யார் குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பது என்பதில் போட்டி நிலவுகிறது. ரூ. 2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது. 10 ரூபாயில் வயிறு நிறைகிறது. சிறிய குடும்பத்திற்கு ரூ.25 போதும். காலை உணவை நிறைவு செய்யலாம்.

2 வகை சட்னி

இதேபோன்று கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ.4-க்கு ஊத்தப்பம், ரூ.5-க்கு சற்று பெரிய அளவில் உள்ள தோசைக்கு சாம்பார் மற்றும் தக்காளி, தேங்காய் என 2 வகை சட்னியுடன் விற்கப்படுகிறது.

மதுரை, சென்னை, திருச்சி கோவை, வெளியூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு இட்லி ரூ.10-க்கும், ஒரு தோசை ரூ.40-க்கும் மேலாக உணவகங்களில் விற்கும் நிலையில் ஏ.புனவாசல், கோவிலாங்குளம் கிராமத்தில் குறைந்த விலையில் இட்லி,தோசை விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

குறைந்த லாபம்

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் கிராமத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கக் கூடும் என்ற நோக்கில் குறைந்த லாபத்தில் இக்கடைகள் இயங்கி வருவது எங்களுக்கு பெரிய உதவியாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story