வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 85 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 85 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Dec 2022 7:00 PM GMT (Updated: 21 Dec 2022 7:01 PM GMT)

கீழ்வேளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 85 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 85 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேசன் அரிசி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இறையான்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கமங்கலம் கிராமத்தில் 85 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகரும் நியாய விலை கடை மூலம் அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரிசி மற்றும் ரேசன் பொருட்கள் அங்குள்ள ஒருவருடைய வீட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அந்த வீட்டில் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கீழ்வேளூர் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. புகாரை தொடர்ந்து கீழ்வேளூர் வட்ட வழங்கல் அலுவலர் இளமதி நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டார்.

85 மூட்டைகள் பறிமுதல்

அப்போது கணக்கில் வராத 71 அரிசி மூட்டைகள் புழு பிடித்து போன நிலையிலும், 14 அரிசி மூட்டைகள் நல்ல நிலையிலும் இருந்துள்ளது. மேலும் அரை மூட்டை துவரம் பருப்பு மற்றும் 5 மூட்டை கோதுமையும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரேசன் அரிசி இருப்பு விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது மொத்தம் உள்ள 85 அரிசி மூட்டைகள் கணக்கில் வராதது தெரியவந்தது.

மக்களுக்கு அரிசியை வழங்கியதாக கணக்கு காட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசி, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்து இறையான்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகனிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பாக நாகை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story