ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்


ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

ரேஷன்கடை ஊழியர்கள்

பொது வினியோகத்திட்டத்திற்காக தனித்துறையை உருவாக்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

4 நாள் வேலை நிறுத்தம்

சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும். மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா நிவாரண பொருட்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்புக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ரேஷன் கடைகள் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

565 கடைகள் மூடல்

இது குறித்து நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறுகையில், "தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1,184 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் 893 கடைகள் நேற்று திறந்திருக்கவேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 565 கடைகள் திறக்கப்படவில்லை. இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இன்று மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்"என்றார்.


Next Story