வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
x

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த்தி உள்ளோம். மழை பாதிப்புக்குள்ளாகும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 131 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பட்டு மையம் உள்ளது.

பருவமழையின் போது மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF) 1149 பேரும், தமிழக அரசின் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் (TNDRF) 899 பேரும் என 2048 பேரை நாங்கள் தயாராக வைத்திருக்கிறோம். 121 பன்னோக்கு மையங்கள் தயாராக இருக்கிறது. எல்லா வகையிலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.

பயிர் சேதங்கள் ஏற்பட்டால், உடனடியாக நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாய துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த பணிகளுக்கும் தயாராக இருக்கின்றனர்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story