பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்களில் 240 மனுக்களுக்கு தீர்வு


பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்களில் 240 மனுக்களுக்கு தீர்வு
x

பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்களில் 240 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் தாலுகாவிற்கு மேலப்புலியூர் (மேற்கு) கிராமத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவில் தழுதாழையிலும், குன்னம் தாலுகாவில் திருமாந்துறையிலும், ஆலத்தூர் தாலுகாவில் நாட்டார்மங்கலத்திலும் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் தாலுகாவிற்கு இலந்தைக்கூடம் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் அங்கராயன்நல்லூரிலும் (கிழக்கு), செந்துறை தாலுகாவில் கிளிமங்களத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் காட்டாத்தூரிலும் (வடக்கு) பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன. கூட்டத்தினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்தினார்கள். இதில் கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடத்தப்பட்டதை அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 81 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மொத்தம் 161 மனுக்களில், 159 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 2 மனுக்கள் சரிபார்ப்புக்காக நிலுவையில் உள்ளது.


Next Story