டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்


டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x

விருதுநகரில் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடந்தது.

விருதுநகர்


விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிவகாசி பாரதிநகரை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மனைவி முத்துமாரி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் முத்துமாரியும், பெண் குழந்தையும் இறந்துவிட்ட நிலையில் உரிய நடவடிக்கை கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் விருதுநகர் கிழக்கு போலீசில் அளித்த புகாரில், தனது மனைவி முத்துமாரி மற்றும் குழந்தையின் இறப்புக்கு காரணமான டாக்டர்கள், தலைமை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் பரிசோதனையை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஆர்.டி.ஓ. முன்பு நடத்தப்பட வேண்டும் என கூறி இருந்தார்.

அதன்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் குற்றவியல் சட்டம் 174-வது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பன்னீர்செல்வம் மற்றும் உறவினர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூர் ஆர்.டி.ஓ. அனிதா, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நிவாரணமும் மற்றும் அரசு வேலையும் வழங்கப்படும் என உறுதி கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து முத்துமாரியின் உடல் பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story