தாமிரபரணி ஆற்றில் 10 டன் துணிகள் அகற்றம்
சிவந்திபுரம் பஞ்சாயத்து சார்பில் தாமிரபரணி ஆற்றில் 10 டன் துணிகள் அகற்றப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
சிவந்திபுரம் பஞ்சாயத்து சார்பாக தாமிரபரணி ஆற்றில் உறை கிணறு பகுதி சுத்தம் செய்யும் பணி கடந்த 20-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர் முன்னிலை வகித்தார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் பணிகளை தொடங்கி வைத்தார்.
இப்பணியில் சிவந்திபுரம் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு இந்த தூய்மை பணியை மேற்கொண்டனர். இவர்கள் குடிநீர் உறியும் உறை கிணறை சுற்றி கிடந்த கெட்டு மக்கிப்போன துணிகளை அப்புறப்படுத்தி வெளியே கொண்டு வந்தனர். இதில் 4 நாட்களும் எடுக்கப்பட்ட துணியின் அளவானது சுமார் 10 டன்னை தாண்டியது. அகற்றப்பட்ட துணிகள், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி உரக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.