அரசு பள்ளியில் சோப்பு ஆயில் கலந்த 3 குடிநீர் தொட்டிகள் அகற்றம்


அரசு பள்ளியில் சோப்பு ஆயில் கலந்த 3 குடிநீர் தொட்டிகள் அகற்றம்
x

கரூர் அருகே அரசு பள்ளியில் குடிநீர் தொட்டிகளில் சோப்பு ஆயில் கலந்த 3 தொட்டிகள் அகற்றப்பட்டது.

கரூர்

சோப்பு ஆயில் கலப்பு

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள 3 குடிநீர் தொட்டிகளில் கடந்த 11-ந்தேதி இரவு மர்மநபர்கள் சோப்பு ஆயிலை கலந்து விட்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், தடயவியல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குடிநீரை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

குடிநீர் தொட்டிகள் அகற்றம்

இதையடுத்து பள்ளியில் உள்ள 3 குடிநீர் தொட்டிகளையும் உடனடியாக அகற்றி, பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அதிரடி உத்தரவிட்டார். இதனையடுத்து பள்ளி வளாகத்தில் சோப்பு ஆயில் கலந்த 3 குடிநீர் தொட்டிகளும் நேற்று அகற்றப்பட்டன.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

தொடர்ந்து அங்கு புதிதாக 3 குடிநீர் தொட்டிகள், கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கரூர் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் சந்தேகப்படும் 3 வாலிபர்களை அழைத்து, சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story