தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட சரக்கு ரெயிலின் பெட்டிகள் அகற்றம்..!


தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட சரக்கு ரெயிலின் பெட்டிகள் அகற்றம்..!
x

சரக்கு ரெயிலில் இரும்பு பொருட்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

செங்கல்பட்டு,

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி நேற்று 46 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் பழைய இரும்பு தளவாட பொருட்கள் இருந்தன. சென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்த இரும்பு பொருட்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகில் (பழைய தாலுகா அலுவலகம் ரெயில்வே கேட் அருகே) வந்தபோது, திடீரென்று தடம் புரண்டது. அப்போது ரெயிலில் இருந்த 9 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி தரையில் சரிந்து நின்றது.

இதையடுத்து சரக்கு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைத்து ஜாக்கி கருவிகள் உதவியுடன் ரெயிலின் சக்கரங்களை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரெயிலின் 9 பெட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சீரமைப்பு பணிகள் முடிந்ததால் விரைவில் விரைவு ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story