மயான சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


மயான சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:47 PM GMT)

கோதண்டராஜபுரத்தில் மயான சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு வயல்வெளிகளுக்கு நடுவில் மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் வயல் வெளி வழியாக உடலை தூக்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் மயானம் செல்வதற்கு சிமெண்டு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த மயானம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் இருந்ததால் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் உள்ள மயான பாதையை மீட்டு சிமெண்டு சாலை அமைக்கக்கோரியும் இன்று (புதன்கிழமை) திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் திருமருகல் சரக வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் குமரேசன், ரத்தினவேல் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.


Next Story