பொது சுவர்களில் ஒட்டிய சுவரொட்டிகள் அகற்றம்


பொது சுவர்களில் ஒட்டிய சுவரொட்டிகள் அகற்றம்
x
தினத்தந்தி 27 Aug 2023 9:15 PM GMT (Updated: 27 Aug 2023 9:16 PM GMT)

வால்பாறை நகரில் பொது சுவர்களில் ஒட்டிய சுவரொட்டிகள் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை நகரில் பொது சுவர்களில் ஒட்டிய சுவரொட்டிகள் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

சுவரொட்டிகள்

வால்பாறையில் நகர் பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும் அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனத்தினர் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக பயணிகள் நிழற்குடை, அரசு பள்ளி சுவர் உள்பட பல்வேறு இடங்களில் அதிகளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளின் கவனம் திசைமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அந்த சுவர்கள் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. இதனால் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அகற்றும் பணி

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணிகளுக்கான மக்கள் இயக்கம் சார்பில் வால்பாறை நகர் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடைகள், அரசு மேல்நிலைப்பள்ளி சுவர்கள், ஆசிரியர்கள் குடியிருப்பு சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியை தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் சுவரொட்டிகளை அகற்றும் பணிக்கு ஒரு தொகையை நகராட்சி நிர்வாகம் செலவிட வேண்டி உள்ளது. இதற்கு மாற்றாக தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சுவரொட்டி ஒட்ட தனி இடம் ஒதுக்கி கொடுத்து, அதை அகற்றி கொள்ள கால அளவு நிர்ணயித்து, குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்தால், இந்த நிலை மாறும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story