ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம்; நாளை மறுநாள் தொடங்குகிறது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம்; நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 Oct 2023 7:42 PM GMT (Updated: 12 Oct 2023 7:56 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நாளை மறுநாள் தொடங்குகிறது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதில் உற்சவத்தின் முதல் நாளன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார். கொலு இரவு 7.45 மணிக்கு தொடங்கி இரவு 8.45 மணி வரை நடைபெறும். இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைவார். 2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாளான 20-ந்தேதி மற்றும் 8-ம் திருநாளான 22-ந் தேதி ஆகிய நாட்களில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருநாளான 21-ந் தேதியன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 23-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதேபோல் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் 23-ந் தேதி வரை மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 6 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 7 மணிக்கு முடிவடையும். இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு தயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இதில் நவராத்திரியின் 5-ம் நாளான வருகிற 19-ந்தேதி வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. அன்று மாலை 3.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 4.15 மணி முதல் 6 மணி வரை பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு கொலு முடிவடையும். இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 9 மணிக்கு தயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். வருகிற 23-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 3.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 4 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுதல் நடைபெறுகிறது. இரவு 7 மணி முதல் 8.15 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


Next Story