புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம்


புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம்
x
தினத்தந்தி 28 Jun 2023 7:15 PM GMT (Updated: 28 Jun 2023 7:15 PM GMT)

மகளிர் சுய உதவி குழுவினருக்கான புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

நீலகிரி

ஊட்டி

மகளிர் சுய உதவி குழுவினருக்கான புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

வணிக வளாகம்

ஊரக பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட அளவிலான முதன்மை விற்பனை வளாகமும், தேவையின் அடிப்படையில் கூடுதல் வணிக வளாகங்களும் பொன் விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன.

இந்த வணிக வளாகங்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பூமாலை வணிக வளாகம் என்று பெயர் சூட்டினார். தமிழகத்தில் நீலகிரி உள்பட 29 மாவட்டங்களில் பூமாலை வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த வளாகங்களை ரூ.5¾ கோடியில் சீரமைக்கும் பணி நடந்தது.

ரூ.40 லட்சத்தில் சீரமைப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பூமாலை வணிக வளாகம் ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்பட்து. இந்த வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு வணிக வளாகத்தை பார்வையிட்டார்.

புதுப்பிக்கப்பட்ட பூ மாலை வணிக வளாக கட்டிடங்களில் உள்ள கடைகள் புதிய வழிகாட்டு நெறிமுறையின்படி தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

பாரம்பரிய பொருட்கள்

இங்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், சிறுதானிய உணவு பொருட்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பழங்குடியினரின் பாரம்பரிய பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, செயற்பொறியாளர் செல்வகுமாரன், ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, தாசில்தார் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story