சத்தரை தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


சத்தரை தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x

மழையால் சேதமடைந்த சத்தரை தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கிராமத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக மப்பேடு, கீழச்சேரி அரக்கோணம், பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த சத்தரை தரைப்பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் போனது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த தரைப்பாலத்தை பார்வையிட்டு சேதமடைந்து உள்ள காரணத்தால் பாலத்தின் இருபுறங்களிலும் இரும்பினாலான தடுப்புகளை போட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தினார்கள்.

இதன் காரணமாக கடம்பத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் இந்த தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாமல் மப்பேடு, பூந்தமல்லி, சுங்குவார்சத்திரம், தண்டலம், அரக்கோணம் போன்ற பகுதிகளுக்கு செல்ல சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டு பேரம்பாக்கம் வழியாக அவதியுற்று சொல்கிறார்கள். குறிப்பாக இந்த கரைப்பாளத்தில் சேதம் அடைந்த ஒரு பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் சத்தரை கூவம் ஆற்றின் குறுக்கே சேதமடைந்த தலைப்பாலத்தை முழுவதுமாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story