ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அமைக்கப்பட்ட குழு அறிக்கை


ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அமைக்கப்பட்ட குழு அறிக்கை
x

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையினை அளித்தது.

சென்னை,

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.

அறிக்கை தாக்கல்

இதனால் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன. இதனையடுத்து, கடந்த 10-6-2022 அன்று சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுனர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையினை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story