வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனையை தெரிவிக்க வேண்டும்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனையை தெரிவிக்க வேண்டும்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x

வங்கிகளில் சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவர்த்தனை நடந்தால் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

வங்கிகளில் சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவர்த்தனை நடந்தால் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

பிரத்யேக கவுண்டர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி வங்கியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நோக்கத்திற்காக வங்கி கணக்குகளை தொடங்குவதற்காக வங்கிகள் உடனடி சேவையை வழங்கவும், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் எடுத்தல், வைத்தல் பண பரிவர்த்தனைக்கு பிரத்யேக கவுண்டர்களை திறப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம்

வங்கிகளால் அவுட்சோர்சிங் செய்யப்பட்ட ஏஜென்சிகள் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்கு செல்லும் போது வங்கிகளால் வழங்கப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள், அடையாள அட்டை, பணமதிப்பு போன்ற விபரங்கள் அடங்கிய தொகுப்பினை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ள நேரத்தில் வழக்கத்திற்கு மாறான சந்தேகத்திற்கு இடமான பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாக நடைபெற்றாலோ, பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ். மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றாலோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் வேட்பாளர்கள் அல்லது அவரை சார்ந்தவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் அல்லது திரும்ப பெற்றாலோ, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதற்கான சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டாலோ மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளிக்க அனைத்து வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேலான பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் போது வருமான வரித்துறை, தேர்தல் மேற்பார்வை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும் வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ், குருநாதன், தேர்தல் தாசில்தார் சிவகாமி மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story