அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்
x

செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

அவருக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோதனை முடிவுகளும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கால் நரம்பு பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுவதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதையடுத்து காலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக மீண்டும் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story