வால்பாறையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்


வால்பாறையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2023 6:45 PM GMT (Updated: 26 Jan 2023 6:46 PM GMT)

வால்பாறையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை, ஜன.26-

வால்பாறையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழா

வால்பாறையில் 74-வது குடியரசு தினவிழா அரசு அலுவலகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பாலு, கவுன்சிலர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் நகராட்சி அலுவலகம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள காந்தி சிலை வளாகத்தில் நகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்கள் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆணையாளர் பாலு வால்பாறை நகராட்சி பகுதி மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கிகளை நாட்டுப்பற்றுடன் செலுத்த வேண்டும்.எனது குப்பை எனது பொறுப்பு என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். வால்பாறை நகராட்சி பகுதியை தூய்மை மிகு நகராட்சியாக பாதுகாப்பேன் என்று உறுதி மொழி ஏற்போம் என்று கேட்டுக் கொண்டார்.

உறுதிமொழி ஏற்பு

வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு இயற்கையை பாதுகாப்பேன், வனவிலங்குகளை பாதுகாப்பேன், சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாப்பேன், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகமாட்டேன், சமுதாய முன்னேற்றத்திற்கும் நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபடுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

வால்பாறை கூட்டுறவு நகர வங்கியில் வங்கியின் தலைவர் வால்பாறை அமீது தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஜோதிபாசு, போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் சதீஷ் குமார், மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் மணிகண்டன், வால்பாறை வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் வெங்கடேஷ், அந்தந்த வார்டு பகுதியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பள்ளிகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நாகராணிகனகராஜ் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் எம். எம். ஆர். துரை, ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர்பாட்சா, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோடங்கிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் குடியரசு தின விழாவை முன்னிட்டு வடபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அபின்யாஅசோக் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணம்மாள் அம்மையப்பன் முன்னிலையில் வைத்தார். இதில் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் வரவு -செலவு கணக்கு விவரங்கள் மற்றும் திருமணங்களை வாசித்தார். இந்த கிராம சபை கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் வடபுதூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story