குடியரசு தின விழாவையொட்டிவிழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுபஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை


குடியரசு தின விழாவையொட்டிவிழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுபஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:47 PM GMT)

குடியரசு தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலெக்டர் த.மோகன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடும் அவர், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்குகிறார்.

பலத்த பாதுகாப்பு

விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, காந்தி சிலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பஸ், ரெயில் நிலையங்களில் சோதனை

மேலும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான சாலைகள், மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் ஏராளமான போலீசார் தீவிரமாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிளமின்ராஜ், ஸ்ரீதர், ஏட்டுகள் உதயகுமார், கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசாரும், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான ரெயில்வே போலீசாரும் இணைந்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளங்கள் கண்காணிப்பு

மேலும் போலீஸ் மோப்ப நாய் டான் உதவியுடன் ரெயில் நிலைய பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி ரெயில்வே தண்டவாளங்களையும் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.


Next Story