குடியரசு தினவிழா: முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி


குடியரசு தினவிழா: முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி
x

குடியரசு தினவிழாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

சென்னை,

நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரின் காரின் முன்னும்பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார்.

இதனை தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். பின்னர், 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார். பின்னர் அதிகாரிகளை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றினார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. பின்னர் ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.


Next Story