விசுவகுடி கிராமத்தில் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை


விசுவகுடி கிராமத்தில் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை
x

கொள்ளை முயற்சியால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே விசுவகுடி கிராமத்தில் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவகுடியை சேர்ந்த முகமது மீரான் அரும்பாவூர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- விசுவகுடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் வீடுகளின் கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக விசுவகுடியை சேர்ந்த முஸ்தபா, முகமது சாலிக் மற்றும் சிலரது வீடுகளில் மர்ம ஆசாமிகள் நுழைந்து திருட முயற்சித்தபோது சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் எழுந்து மர்ம ஆசாமிகளை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது போன்ற சம்பவம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். எனவே விசுவகுடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு மர்ம ஆசாமிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story